January 22, 2019 தண்டோரா குழு
மேற்கு வங்கத்தில் ரத யாத்திரையை நடைபெற விடாமல் தடுத்த மம்தா பானர்ஜியை, அம்மாநில மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பிரதமர் நரேந்திர மோடியை நாட்டு மக்கள் அனைவரும் நம்புவதாகவும், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து நீக்க, நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 9 பேர் கலந்து கொண்ட பெரிய மாநாடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை குறிப்பிட்டு பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, “பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்துடன் 9 பேர் மேடையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் உண்மையில் நமக்கு நரேந்திர மோடி என்ற ஒரே பிரதமர் தான். அவரை மக்கள் முழுதாக நம்புகின்றனர்” என்று கூறினார்.
மேலும், மம்தா பேனர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வீழ்த்தும் எனவும் உறுதியளித்தார். “பாரதிய ஜனதாவின் ரத யாத்திரையை தடுத்த மம்தா பானர்ஜியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் மக்கள் மத்தியிலிருந்து பா.ஜனதாவை நீக்க முடியாது. யாத்திரைக்கு நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை. இது பெரிய விஷயம் கிடையாது. நாங்கள் கடினமாக உழைப்போம், உங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். பஞ்சாயத்து தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் மக்களை வாக்களிக்கவிடவில்லை. இப்போது அதுநடக்காது. மத்திய தேர்தல் ஆணையம் பணியை கையில் எடுக்கும். மக்கள் வாக்களிக்க பயம் கொள்ள தேவையில்லை.
மேற்கு வங்காளத்திற்கு மோடி அரசு ரூ. 3.95 கோடியை கொடுத்துள்ளது. மத்திய அரசு வழங்கிய பணத்தில் பாதியை ஊடுருவல்காரர்களும், பாதியை திரிணாமுல் காங்கிரசாரும் விழுங்கிவிட்டனர். என்ஆர்சியால் இந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பசுக்கள் காணாமல் போகாது. திரிணாமுல் காங்கிரசை ஆட்சியைவிட்டு அகற்றினால் சிண்டிகேட் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை” என்று அமித்ஷா கூறியுள்ளார்.