January 22, 2019 தண்டோரா குழு
பாலில் கலப்படம் செய்வது ஆரோக்கியத்திற்கு விடப்படும் சவால் இதனை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பால் கலப்படம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு நீதிபதிகள் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதன் பின்னர் நீதிபதிகள்,பாலில் கலப்படம் செய்வது ஆரோக்கியத்திற்கு விடப்படும் சவால். இதனை நீதிமன்றம் கண்ணைமூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்த வழக்குகள், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தண்டனை விவரங்கள், அபராதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும்,இது தொடர்பாக விவரங்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விரிவாக அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாலின் தரம், அதனை பரிசோதிக்கும் ஆய்வகம், விற்பனை மையங்கள், உணவுப்பாதுகாப்பு துறையின் நடவடிக்கைகள் என அனைத்தையும் நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிவித்தனர்.