January 16, 2019
தண்டோரா குழு
பாலமேட்டில்காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.
உழவர் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என பெயர் பெற்ற, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து துவக்கினார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 988 காளைகள் களமிறக்கப்பட்டன. 855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.இவர்களில் 846 பேர் உடல் தகுதி சோதனையில் தேர்வாகி களமிறங்கினர்.அதைப்போல்,வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை அடக்கும் வீரர்களுக்கு டூவீலர்கள், எல்இடி டிவி, ஆட்டுக்குட்டி, பசுங்கன்று, பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் 602 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.நேரமின்மை காரணமாக 125 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படவில்லை.ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த மாடாக மலப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரது மாடு தேர்வு, அவருக்கு மாருதி ஆம்னிவேன் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அலங்காநல்லூர் ஒத்தவீட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.