February 24, 2018
தண்டோரா குழு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன் என கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து, இன்று மாலை, 5:20க்கு, சென்னை வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால் , மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி கலைவாணர் அரங்கில் பணிபுரியும் மகளிருக்கு, இரு சக்கர வாகனங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும், ‘அம்மா ஸ்கூட்டர்’ திட்டத்தை, துவக்கி வைத்தார். ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதற்காக, 1,000 இரு சக்கர வாகனங்கள், கலைவாணர் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விழாவில் பேசிய பிரதமர் மோடி,
அன்புள்ள சகோதர, சகோதரிகளே பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன். பெண்கள் படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம். அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளில் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கனவு திட்டமான மானியவிலை ஸ்கூட்டர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் சார்ந்தே திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கான பிஎஃப் பணத்தை அரசு குறைத்துள்ளது. பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் 70 சதவீதம் பயன் பெறுவது பெண்களே
இவ்வாறு அவர் பேசினார்.