April 29, 2019 தண்டோரா குழு
ஃபானி புயலானது சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து கடந்த சனிக்கிழமை புயலாக மாறியது.ஃபானி புயலானது இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது நாளை அதிதீவிர புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பானி புயலானது தமிழகம் மற்றும் ஆந்திராவில் கரையைக் கடக்காது எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசாவில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பால சந்திரன் கூறுகையில்,
பானி புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும், திரிகோண மலைக்கு 620 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 1050 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதன் பிறகு திசை மாறி வடகிழக்கு திசையில் நகரக்கூடும். மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து பகல் 12 மணிக்கு தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு இல்லை. இதனால் நேரடி பாதிப்பு இல்லை. இந்த புயல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதியில் நெருங்கி வரும் வேளையில் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும். ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனிடையே புயல் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான ஏற்பாடுகளை செய்ய அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது