November 6, 2017
தண்டோரா குழு
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அருணாச்சலப் பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பிரச்சினை உள்ளது. இதற்கிடையில், நேற்று அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில்,அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், தங்களது நிலையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
மேலும், பிரச்சனைக்குரிய பகுதியில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் செய்வது இருநாடுகளுக்கு இடையிலான அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எனவும் இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.எனினும், பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வருமென நம்புவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.