March 22, 2019 தண்டோரா குழு
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் டில்லியில் நடந்த பா.ஜ., செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் துவக்க வீராராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் பிரபலமானார் கவுதம் காம்பீர். ஐபில் தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். கவுதம் காம்பீருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் கவுதம் காம்பீர் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். அப்போது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுவதாக காம்பீர் கூறியுள்ளார்.
பின்னர், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் காம்பீர் சந்தித்தார். மேலும்,டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படும் கூறப்படுகிறது.