March 12, 2019 தண்டோரா குழு
இந்திய பாகிஸ்தான் பதட்டத்தை தணிக்க பயங்கரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கங்ககளை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி மத்திய அரசு, அந்நாட்டை உலக அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது மேலும் இந்திய – பாகிஸ்தான் எலையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில் இருநாடுகளிடையேயான பதற்றமான சூழலை தடுக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை தொடந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷியையும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே இருவரையும் அழைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் பேசினார்.
அப்போது அவர் பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரிடம் குரேஷி உறுதி அளித்தார். இச்சந்திப்பு குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.