July 6, 2021
தண்டோரா குழு
கோவை மாநகரில் உள்ள பஸ், ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் வரும் பயணிகளில் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினமும் 500க்கும் குறைவானவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி பகுதிகளை சார்ந்தவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதிற்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள் முக்கிய காரணமாக கருத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பஸ், ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனைகள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை காந்திபுரம், திருவள்ளூர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பஸ்நிலையங்கள், ரயில் நிலையங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளியூரில் இருந்து வரும் பயணிகளில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் தொடர்ந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்,’’ என்றார்.