November 9, 2019 தண்டோரா குழு
பழையதை மறந்து, ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று குறிப்பிட்டனர். இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார
இது குறித்து அவர் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். பல சகாப்தங்களாக நடந்து கொண்டிருந்த இந்த வழக்கில் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இது வெற்றி அல்லது இழப்பாக கருதக்கூடாது. சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான அனைவரின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். பழையதை மறந்து, ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். தீர்ப்பு குறித்து எந்த விவாதமும் தேவையில்லை என கூறியுள்ளார்.