August 24, 2019 தண்டோரா குழு
பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து அவர்கள் தாக்குதல் நடத்த கூடும் என்ற அடிப்படையில் கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் கூடும் இடங்களில் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு நிபுணர்கள், காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
2வது நாளாக கோவையில் சோதனை தொடரும் நிலையில், ரயில் நிலையம், பேருந்துநிலையம், கோவில்கள், ஆலயங்கள், பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு சற்று தளர்த்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரோ அல்லது கமாண்டோ படையினரோ இல்லாமல், மாநகர போலீசார் மட்டுமே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் காவல்துறை ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது. மூன்று பேரில் இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கோவையை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.