June 14, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள செயிண்ட் பிராரீஸ் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று தடுப்பு மையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் பணிகள், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறிந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் போன்றவற்றை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கணினி மூலம் தொலைபேசியில்தொடர்பு கொண்டு மருத்துவம்
வழங்கும் பணிகள், கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா, நகர் நல அலுவலர் ராஜா, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி அலுவலர்களிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விரிவாக அவர் கேட்டறிந்தார் எனவும், சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும் அலோசிக்கப்பட்டதாக மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.