February 4, 2019 தண்டோரா குழு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிப்ரவரி 7-க்குள் சரணடைய சிறப்பு நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில் அவர் சரணடைய உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி மீது 1998-ல் பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் மேல் முறையீடு செய்ய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி அமைச்சர் மேல் முறையீடு செய்வதற்காக அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதனை அடுத்து, பாலகிருஷ்ணா ரெட்டி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுவிட்டது.
இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிப்ரவரி 7-க்குள் சரணடைய சிறப்பு நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.