June 16, 2020
தண்டோரா குழு
நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவரை கடந்த மே 25ம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மே 26ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக அன்றைய தினம் நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைத்துறையின் கீழ் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அவசர நெஞ்சு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன், இதய அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியர்கள் அரவிந்த், மின்னத்துல்லா, மயக்கவியல் துறைத் தலைவர் பி.ஜெய்சங்கர நாராயணன், உதவிப் பேராசிரியர் மணிமொழிச்செல்வன், கோபிநாத், செவிலியர்கள் விஜயலட்சுமி, கல்பனா ஆகியோர் கொண்ட குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, சுமார் 30 மணி நேரம் நெஞ்சு பகுதியில் குத்தியிருந்த கத்தியை பாதுகாப்பாக அகற்றினர். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.