• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரியில் கடைகள் அடைப்பு – ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

December 10, 2021 தண்டோரா குழு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகையில் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர்.

மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முப்படை தளபதிகள், இராணுவ அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படுகாயமடைந்த வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுக காத்திருந்த உடல்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல பல்வேறு இடங்களில் இராணுவ வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இன்று ஒரு நாள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வியாபார கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மருந்தகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இதேபோல சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. பள்ளி ஆட்டோக்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஆகியவை வழக்கம் போல இயங்கி வருகின்றன. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் படிக்க