September 19, 2019 தண்டோரா குழு
கோவையை அடுத்த முத்துக்கவுண்டனூரில் நீராபானம் இறக்கிய விவசாயியை மது விலக்கு போலீசார் தாக்கியதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த முத்து கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி.இவர் அங்குள்ள அவருக்கு சொந்தமான அங்காளம்மன் கோவில் தோட்டம் என அழைக்கப்படும் அவரது தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்கி உள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அந்த தோட்டத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்னை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை உடைத்துள்ளனர். மேலும் தென்னம்பாளைகளையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் மூன்றரை இலட்சம் மதிப்பு கொண்ட 7 தென்னை மரங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து,நாரயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த விவசாயிகள், போலீசாரை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்தனர். பின்னர் விவசாயிகள் காவல் துறை மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில்,
தொடர்ந்து இதுபோன்று நீராபானம் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் செய்து வருகின்றனர், அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகாவில் உள்ளது போல நீராபானம் இரக்க தமிழக அரசும் அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் தமிழக அரசு மனுவை ஏற்று அனுமதி அளிக்கும் என தாங்கள் நம்புகிறோம். இதுபோன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டால் நாங்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.