June 15, 2019 தண்டோரா குழு
மேல்நிலை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவ கல்வியில் சேர முடியாது என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளதாக திராவிடர் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
நீட் தேர்வை கண்டித்தும், மத்திய அரசின் மும்மொழிக்கல்வி முன்வரவை கண்டித்தும் கோவையில் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் மும்மொழி கொள்கை திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தின் மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி,
மும்மொழி கல்வி திட்டம் மூலமாக இந்தியை திணிப்பதோடு, மாநில கல்வி முறைகளை சீரழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் நீட் தேர்வு காரணமாக இவ்வாண்டு அரசு பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர் கூட மருத்துவ கல்லூரியில் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மேல்நிலை வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மருத்துவராக முடியாதவாறு வர்ணாசிரம கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த முயல்வதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார்.