April 2, 2019 தண்டோரா குழு
நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
17-வது நாடாளுமன்ற தோ்தல் வருகின்ற 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 54 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் அமைச்சா்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி ஆகியோர் முன்னிலையில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்குயை வெளியிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,
அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின்மூலம் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் பயனடையும். பண மதிப்பிழப்பு பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும். புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை.கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
2030ம் ஆண்டுக்குள் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தமுறை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும். என இவ்வாறு அவர் கூறினார்.