July 6, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,”நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது,அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன.இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால்,தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே,மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும்,நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இம்மனு நீதிபதிகள் சி.டி.செல்வம்,ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடராத நிலையில்,இந்த வழக்கை பெரிதாக எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அப்போது நீதிபதிகள் நீங்கள் தவறு செய்தாலும்,அதை எதிர்த்து யாரும் வழக்கு தொடர கூடாது என்கிறீர்களா?நீட் தேர்வு வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா? பெரும்பான்மையை காரணம் காட்டி தவறான விடைகளை கூட சிபிஎஸ்இ ஏற்கிறது என்றனர்.