February 20, 2019
தண்டோரா குழு
அமெரிக்காவின் தெற்கு ஜெர்சியில் அமைந்துள்ள உணவகத்தில், சர்வராக பணி புரிகிறார் கோர்ட்னே. தனது முதல் குழந்தையை சுமக்கும் இவருக்கு, தற்போது, 7வது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. தினமும் சளைக்காமல் பணிக்கு சென்று, அனைவருக்கும் புன்னகையுடன் பரிமாறும் கோர்ட்னே, ஒருநாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு உணவு பரிமாறியுள்ளார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணி கோர்ட்னேவின் மீது போலீஸ் அதிகாரிக்கு பரிவு உண்டாகியுள்ளது. இதையடுத்து, அவரை பற்றி உணவகத்தில் விசாரித்துள்ளார். கோர்ட்னே குறித்து உணவகத்தில் கூறும் போது, இது அவருடைய முதலாவது குழந்தை. ஆனால், கோர்ட்னே தொடர்ந்து வேலை செய்து வருகிறார் என்றனர். இதைப் பற்றி கேட்ட அதிகாரி வியப்பில் உறைந்திருக்கிறார். குழந்தை பேறு அடையும் போது ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு என சலுகைகளை எதிர்பார்க்கும் நிலையில், கோர்ட்னே வித்தியாசமாக தெரியவே, அதிகாரி அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதன் பின்னர், 8.75 டாலர்கள் என கட்டணம் குறிக்கப்பட்ட, அவருக்கான பில் வந்துள்ளது. அதில், கூடுதலாக 100 டாலர்கள் டிப்ஸாக கொடுத்துள்ளார். இதற்கிடையில், இதை எதையும் அறியாத கோர்ட்னே, வழக்கம் போல் வேறு ஒரு டேபிளில் தனது பணியை தொடர்ந்து கொண்டிருந்தார். அதற்குள் போலீஸ் அதிகாரியும் சென்று விட்டார். இதையடுத்து, உணவக உரிமையாளரிடம் அந்த தொகை சென்று சேர்கிறது. அதன் பின்னர், அவர் கோர்ட்னேவை அழைத்து, அவருக்கு 100 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனை அறிந்ததும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும், அதிகாரி வழங்கிய குறிப்பில், “முதல் குழந்தையை கொண்டாடுங்கள். இது தான் நீங்கள் எப்போதும் மறக்க முடியாத தருணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கோர்ட்னேவின் தந்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.