April 17, 2018
தண்டோரா குழு
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தை விசாரிக்க காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி.இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து,பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்களும் சக மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை நேற்று கைது செய்தனர்.அவரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில்,மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை மதுரை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.அதைப்போல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உத்திரவிட்டார்.
இந்நிலையில்,கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தை விசாரிக்க காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது.மேலும்,ஆளுநர் உத்தரவுப்படி விசாரணை நடத்த உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்திற்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.