January 22, 2018
தண்டோரா குழு
பெங்களூரு நித்தியானந்தா ஆசிரம குழந்தைகளுக்கு கொச்சை வார்த்தைகளை கற்றுத்தருவதாக நித்யானந்தா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் புகார் அளித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து சமீபத்தில் கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலரும் அவரையும் அவரது குடும்பத்தையும் ஒருமையில் பேசி வந்தனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் நித்தியானந்தா ஆசிரமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வைரமுத்து குறித்து கொச்சையான விமர்சனங்கள் வைக்க அவருடன் இருந்த காவியுடை அணிந்த சில சிறுமிகள் ஆபாச வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சனம் செய்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து பலரும் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில்,சேலத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் பியூஷ் மனுஷ் என்பவர் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக ஆபாசமாக விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக மாநில டிஜிபி மற்றும் தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து,இப்புகாரின் அடிப்படையில் கர்நாடக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.