December 31, 2018
தண்டோரா குழு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நாளை முதல் கடைகளில் விற்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகரட்சி ஆணையாளர் விஜய் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது திடக்கழிவு மேலாண்மைக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்கும் அவை பெரும் கேடு விளைவித்து வருகின்றன இதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். தமிழகம் முழுவதும் இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதையடுத்து நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை இன்று பறிமுதல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய கார்த்திகேயன்,
வீடு, கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளில் விற்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.