August 31, 2019 தண்டோரா குழு
நாளை முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
பணமதிப்பிழப்புக்கு பின் பணமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக சேவை கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆன்லைன் டிக்கெட் வருவாய் கடந்த 2016-17ம் ஆண்டில் 26 சதவீதம் குறைந்தது. இந்த சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இ-டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்கலாமா என ரயில்வே வாரியத்துக்கு, ஐஆர்சிடிசி கடிதம் எழுதியிருந்தது. இது குறித்து நிதித்துறை அமைச்சகத்திடம் ரயில்வே வாரியம் ஆலோசித்தது. ‘‘சேவை கட்டணம் ரத்து எனபது தற்காலிக நடவடிக்கைதான், எனவே, இ-டிக்கெட்டுகளுக்கு ரயில்வே அமைச்சகம் மீண்டும் சேவை கட்டணம் விதிக்கலாம்’’ என கூறியது.
இதையடுத்து இ-டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்க ஐஆர்சிடிசிக்கு, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இனி குளிர்சாதன வசதியற்ற பெட்டிகளுக்கு முன்பதிவு செய்ய ரூ.15, குளிர்சாதன வகுப்புகளுக்கு ரூ.30 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.