November 16, 2019 தண்டோரா குழு
திரைத்துறையில் படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாகக் கூறி அரைநிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. இதைத்தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது சர்ச்சைக் கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இவர், அவரது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர்.
இதற்கு தெலுங்கில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த சில வருடங்களால சென்னையில் வசித்து வருகிறார். தனது சர்ச்சையான கருத்துகளால் பிரபலமடைந்த அவருக்கு தமிழகத்திலும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எனக்கு தமிழக மக்கள் ஆதரவாக இருந்துள்ளீர்கள். இருக்க போகிறீர்கள். அதனால் தான் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்துவிட்டேன். தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு முன்னுதாரணம். அரசியலிலும் திரையுலகிலும் கோலோச்சியவர். அதே போல் கலைஞர் மீதும் பெரிய மரியாதை உண்டு. அவர் மகன் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. சமீபத்தில் உதயநிதி மீது நான் புகார் கூறியதை போன்ற பதிவை பார்த்தேன். அது போலியான புகார். அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. என் பெயரை வைத்து உதயநிதி மீதும் திமுக மீதும் களங்கம் கற்பிக்க முயல்கின்றனர். நான் உதயநிதியை நேரில் பார்த்தது கிடையாது. என் பெயரை தவறாக பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது. எனது பெயரில் ஃபேஸ்புக்கில் 100-க்கும் மேற்பட்ட போலியான கணக்குகள் உள்ளன. இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன்.
என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.
மேலும், “விரைவில் அரசியலுக்கு வரவுள்ளேன். எந்த கட்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை இப்போது கூற முடியாது. நேரம் வரும் போது அந்த கட்சி தலைவர்களுடன் அறிவிப்பேன். தமிழகத்தில் தான் அரசியல் செய்யவுள்ளேன். நான் அரசியலுக்கு வந்தால் தவறு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.