February 3, 2026
தண்டோரா குழு
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி அவர்களுக்கு, விகடன் குழுமத்தின் முன்னணி நிதி மற்றும் வணிக இதழான ‘நாணயம் விகடன்’வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.கடந்த ஜனவரி 29, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் மருத்துவம்,கல்வி,சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமியின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக,பின்வரும் துறைகளில் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவம்:
அமெரிக்காவில் தனது மருத்துவப் பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர், நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கனவோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைத் தொடங்கினார்.
கோயம்புத்தூரின் வளர்ச்சி:
இவரது முயற்சியால் கோயம்புத்தூர் ஒரு மிகச்சிறந்த மருத்துவ மையமாக உருவெடுத்தது. பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை இப்பகுதிக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். 6ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.
கல்விச் சேவை:
மருத்துவம் மட்டுமின்றி,’டாக்டர் என்.ஜி.பி.’கல்வி நிறுவனங்கள் மூலம் கலை, அறிவியல்,பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.
சமூக நலப்பணிகள்:
‘என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை’ மூலமாக ஏழை மாணவர்களின் கல்விக்கும், எளிய மக்களின் மருத்துவச் செலவுகளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்த விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, விகடன் குழுமத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,”இந்த விருது எனக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல; என்னுடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கிடைத்த பெருமை. தரமான மருத்துவமும் கல்வியும் சிலருக்கு மட்டுமேயான சலுகையாக இருக்கக் கூடாது; அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உரிமை என்பதே எனது லட்சியம்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.