June 17, 2019 தண்டோரா குழு
பெரியநாயக்கன்பாளையத்தில் அவுட்டு காய் என்ற நாட்டு வெடி மூலம் காட்டுப்பன்றியை கொன்ற இருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், காட்டுபன்றிகள், சிறுத்தைபுலிகள், மான்கள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீர்காகவும் மலை அடிவாரத்திலுள்ள ஊருக்குள் புகும். இதனை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு பன்றிகளை வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனப்பணியாளர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது நாயக்கர் தோட்டம் என்னும் பட்டா நிலப்பகுதியிலிருந்து சந்தேகத்திற்கிடையிலான வகையில் கையில் பையுடன் இரண்டு நபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தப்போது, அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடியை அந்த தோட்டத்தில் வைத்ததும், அதை கடித்து இறந்த காட்டுப்பன்றியை வெட்டி கறியாக்கி எடுத்துச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கூடலூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த குமார்,திருமலைநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீது வன உயிரின பாதுகாப்புச்சட்டம் 1972ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.