May 23, 2019 தண்டோரா குழு
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் தொடங்கியது.
நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டமாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு
கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. பின்னர், இறுதிக்கட்ட தேர்தலின்போது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது.
இந்நிலையில், மக்களவைக்கு நடந்த 7 கட்ட வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 90.99 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.