November 11, 2019 தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித்தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. அமமுக புகழேந்தி அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்தால், தலைமை கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும். உள்ளாட்சித்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு என்றும் உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் குறித்த காலத்தில் தேர்தலை அறிவிப்பார்கள் என நம்புகிறோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித்தேர்தலிலும் தொடரும் என்றார்.
தமிழகத்தில் வெற்றிடம் தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் ஒரு நடிகர். அரசியல் தலைவர் அல்ல. விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்பதற்காக ரஜினியின் கருத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. சென்னையில் காற்று மாசு இல்லை என்பதை வருவாய் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுற்றுலா தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.