April 11, 2019 தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
கோவையில் வரும் சனிக்கிழமை மே 17 இயக்கத்தின் சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தற்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புதிய ஊழல் வெளிவந்துள்ளது. அதாவது, 3 லட்சம் கோடி ரூபாய், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் கண்காணிப்பில் அச்சிடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாக, அந்தப் பணம் இந்தியா கொண்டு வரப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் வெளிக்கொண்டு வர முயற்சி செய்ததால், இந்த ஊழல் நிறுத்தப்பட்டது. இந்தப் பணிக்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா 15 முதல் 40 சதவீதம் வரையில் கமிஷன் பெற்றுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை மாற்றுவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் நகரமான கோவையில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. கொங்கு பகுதியில் எங்களின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நாளை மறுநாள் மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு ராணுவத்துறையில் பிரதமர் மோடியின் மேற்பார்வையில் அரங்கேறிய மிகப்பெரிய ஊழல் ரபேல் ஊழலாகும். இந்த ஊழலில் அம்பானி குழுமத்திற்கு இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். இங்கு பா.ஜ.க., – அ.தி.மு.க. கூட்டணியின் ஊழல்களை மட்டுமே இங்கு சுட்டிக் காட்டியுள்ளோம். இந்துத்துவா அமைப்புகளின் ஆதிக்கம் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும். பா.ஜ.க. வெற்றி பெற்றால், இனி எதிர்வரும் காலங்களில் தேர்தல் நடத்தப்படாது என பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன. ராணுவத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்று, சர்வாதிகார ஆட்சியை மோடி செய்வார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை இந்த 3 கோடி ஊழல் பாதிக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் கூட்டத்தில் மாநிலத்தின் வளங்களை பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் எவ்வாறு சுரண்டுகின்றன என்பதை அம்பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.