September 21, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள், செப்டம்பர் 30 ஆம் தேதி. வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 24 ஆம் தேதி வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் அதிக முக்கியத்துவம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.