May 13, 2019 தண்டோரா குழு
கமலின் நாக்கில் சனி உள்ளது அவரது நாக்கை அறுக்க வேண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,
முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். கமலின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கமல்ஹாசன் இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதியில் சென்று இந்து தான் முதல் பயங்கரவாதி என்று பேசியிருக்கிறார். கமலுக்கு நாக்கில் சனி உள்ளது. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. தீவிரவாதியை தீவிரவாதி என்றே கூற வேண்டும். கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக்கூடாது.அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.