December 3, 2019 தண்டோரா குழு
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் கூட்டமாக வசித்து வருகின்றன. அவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்கு அருகிலுள்ள ஊருக்குள் புகுந்து வீடு, விளை நிலங்களை சேதம் செய்து வருகின்றன. சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டு விடுகிறது.
இதற்காக வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையான நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் இன்று காலை சுமார் ஐந்து யானைகள் கூட்டம் சாலையை கடக்க நின்றது. அப்போது போக்குவரத்து அதிகமாக இருந்ததால் யானைகள் சிறிது நேரம் அங்கு நின்றபடி மெதுவாக சாலையை கடந்து மலைப்பகுதிக்குள் சென்றன. இதனால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
காட்டு யானைகள் மலைப்பகுதியில் இப்பகுதிக்கு உணவு தேடி வருகிறது. எனவே வனப்பகுதியில் அதற்கான உணவுகளை ஏற்பாடு செய்து விட்டால் அவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராது என்றும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் வன எல்லைகளில் அகலிகள் அமைத்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.