December 10, 2021
தண்டோரா குழு
கோவையில் நண்பர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கோவை நீலிகோனாம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கவுதம்(39). திருமணமாகாதவர். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவர் அடிக்கடி விருதுநகரில் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அங்கு அவருக்கு சாமியார் ராஜேந்திரன்(எ) அன்பே சிவம்(45)பழக்கமானார். இருவரும் மிகவும் நட்பாக பழகி வந்தனர்.
அவர்களின் நட்பு நாளடைவில் சாமியார் ராஜேந்திரன் கோவைக்கு வந்தால் கவுதம் வீட்டில் தங்கி செல்லும் அளவுக்கு வளர்ந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாமியார் ராஜேந்திரன் கோவை வந்து கவுதம் வீட்டில் தங்கினார். அப்போது கவுதம் தனது வீட்டின் கீழ் போர்சனை போக்கியத்துக்கு விட்டு அதன்மூலம் கிடைத்த ரூ.3 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் ரூ.3 லட்சத்தை காணவில்லை. சாமியார் ராஜேந்திரனும் அங்கு இல்லை. அவர் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம் அவரது செல்போனுக்கு தொடர்பு கொள்ளமுயற்சித்தார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கவுதம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். கோவையில் தலைமறைவாகியிருந்த சாமியார் ராஜேந்திரன்(எ) அன்பேசிவம் என்பவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.