April 23, 2019 தண்டோரா குழு
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார். வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வருகை தந்தார். அப்போது, சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற தகவல் வெளியானது. இதனால், அவர் வாக்களிக்காமல் போனது. எனினும், சிவகார்த்திகேயன் தான் வாக்கினை பதிவு செய்துவிட்டதாக தனது ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் மட்டும் எப்படி வாக்களித்தார் என கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்துள்ளார். அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதைபோல், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.