October 10, 2017
தண்டோரா குழு
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வருகிறார். இவருடன் நடிகர் சந்தானம் சென்னை குன்றத்தூர் அருகே பெரிய கட்டிடம் ஒன்றைக் கட்ட முயன்றதாகவும் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சண்முகசுந்தரத்திற்கும் சந்தானத்திற்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை சந்தானம் தனது மேனேஜர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து, இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தானம் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது.இதற்கிடையே நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார்.
அதைப்போல் பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை தாக்கியதாக சந்தானம் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் ” இந்த தாக்குதல் நடவடிக்கைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை தவறாக என் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.