May 27, 2021
தண்டோரா குழு
நடமாடும் காய்கறி வாகனங்களை கண்காணிக்க வார்டு வாரிய அலுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், மாநகராட்சி 100 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும்,சில்லறை வியாபாரிகளும் இந்த வியாபாரத்தில் ஈடுபடும் வகையில் 920 வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் காய்கறி விற்பனைக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்பணி சரியாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு வார்டுகளுக்கும் உரிய பொறுப்பு அலுவலர்களும், மண்டலத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மாநகராட்சி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலமாக காய்கறிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டாலோ, உடனடியாக வார்டு பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி, கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பு அலுவலர் மதுசூதனன் – 9894065592, மேற்கு மண்டலம் மேனகா குமாரி – 9894507629, தெற்கு மண்டலம் மணி – 9943997274, வடக்கு மண்டலம் கார்த்திகேயன் – 9786631660, மத்திய மண்டலம் ஆனந்தி – 9994056109 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் 100 வார்டு பொறுப்பு அலுவலர்களுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் மண்டல வாரியாக பல்பொருள் அங்காடிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதியினையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.