May 13, 2019 தண்டோரா குழு
இலங்கையில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் அங்கு முஸ்லிம்கள் மீதும், அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலை தளங்களுக்கு இலங்கை அரசு தற்காலிக தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில், இலங்கையில் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. நாளை(மே 14) காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரவை மீறினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனவும் அந்நாட்டு போலீஸ் தலைமை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.