February 2, 2019 தண்டோரா குழு
மடத்துக்குளம் அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டு யானை சோர்வடைந்து தரையில் படுத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 25ம் தேதி விநாயகன் யானையை பிடித்த அதே இடத்தில் சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது.சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில், சின்னத்தம்பி காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. தற்போது பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி வருகிறது. இதனால் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி யானை சென்றது. இந்நிலையில், அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை சோர்வில் தரையில் படுத்தது. இதனால் யானை மயக்கம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், சின்னத்தம்பி யானை உறக்கத்தில் இருப்பதாகவும், சற்று நேரத்தில் எழுந்துவிடும் என வனத்துறை தகவல் அளித்துள்ளது.