December 19, 2018
தண்டோரா குழு
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்க கோரி புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று அக்கட்சி தலைவர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,
“தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரியும், மேலும் அதற்கு உரிய அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தியும் நாங்கள் நீண்ட காலமாக போராடி வருகிறோம். எனவே, எங்களது நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பட்டியில் இருந்து விடுவித்து அரசாணையை வெளியிட வேண்டும்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். கடந்த 10 நாட்களாக, 14 மாவட்ட மக்களோடு அந்தந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தேன். கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, இதனால் அரசுக்கு எவ்வித பொருளாதார பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் ஆண்டாண்டு காலமாக விவசாய தொழில் செய்து வருகிறது. அந்த மக்களை அரசு போராட்டத்திற்கு தள்ளாமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.