December 11, 2018 தண்டோரா குழு
தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, பாஜக செல்வாக்கை இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,
“என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது. இது பாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை’ என்று எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையாக முயற்சிப்பதாக கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.