March 16, 2019
தண்டோரா குழு
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் பாதுகாப்புப் பணிக்காக உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூரில் இருந்து துணை ராணுவ படையினர் இரு கம்பெனி போலீசார் ரயில் மூலம் கோவை வந்து உள்ளனர். மொத்தம் 168 பேர் வந்து உள்ளனர். அதில் ஒரு கம்பெனி போலீசார் கோவைக்கும் மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்கள் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலாக துணை ராணுவப் படையினர் கோவை வருவார்கள் என காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.