July 27, 2021
தண்டோரா குழு
தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் போக்குவரத்து அணி சார்பாக அனைத்து வகை சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரியை ஒரு வருட காலத்துக்கு ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி, தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் போக்குவரத்து அணியினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து அணியின் தேசிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வாகன உரிமையாளர்களில் சுற்றுலா வாகனங்களுக்கு 1 வருட கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா வாகனங்களுக்கு உண்டான வாகன கட்டணங்களை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் கோவிட் காலத்தில் வாகன கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வாகன கடனை வசூல் செய்ய தனியார் நிறுவனங்கள் அடியாட்களை கொண்டு மிரட்டுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.