November 4, 2019 தண்டோரா குழு
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியரை மர்மநபர் தீவைத்து எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்பூரமெட் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், விஜயா ரெட்டி என்பவர் தாசில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் சுரேஷ் என்ற விவசாயி, நில பத்திர பதிவு தொடர்பாக முறையிட்டுள்ளார். அப்போது விஜயாரெட்டி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் தீவிரமடைந்து சுரேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென தாசில்தார் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இதனால் அலறி துடித்தவாறு அறையில் இருந்து எரிந்த நிலையில் வெளியே வந்த தாசில்தாரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முடியாமல் அதிர்ச்சியில் திணறி நின்றனர். இதனால் சிறிது நேரத்தில் விஜயா ரெட்டி துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து, சுரேஷ் போலீசாரிடம் சரணடைந்தார். அரசு அலுவலகத்தில் பெண் வட்டாட்சியரை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.