September 1, 2019
தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனாலும் நான் தமிழகத்துக்கு சகோதரிதான் என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தர ராஜனும், மகாராஷ்டிர மாநில கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி, இமாச்சல பிரதேச கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா, கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கவர்னராக நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை கூறுகையில்,
கவர்னர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவராக எனது பதவிக்காலம், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனாலும் நான் தமிழகத்துக்கு சகோதரிதான். தமிழகத்துக்கும் என் சேவை இருக்கும். எல்லோரும் ஒரே நாடு என்ற எண்ணத்துடனே தெலங்கானாவுக்குச் செல்கிறேன். இந்த வயதில் இத்தனை உயர்வு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. 44 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துவிட்டு இப்போது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது மகிழ்ச்சி. அன்பான தொண்டர்களுக்காக தந்தையை விட்டுத்தர வேண்டியிருந்தது.இன்று என் தந்தையே இந்த பாதையை நான் தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.