May 8, 2019 தண்டோரா குழு
தென்னை நலவாரியம் அமைத்தவர் கலைஞர் என சூலூர் இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரச்சகன் பிரச்சாரம் செய்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்மட்ட செயற்திட்டக்குழு உறுப்பினருமான ஜெகத்ரச்சகன், சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையூர் மற்றும் மலைப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அப்பகுதி பெண்களிடம் வாக்குசேகரித்தவர், அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் தண்ணீர் பிரச்சினைகள் இருப்பதை அவர்கள் கூறினர். அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறையை போக்கலாம் என்பதை அறிந்தவர், அந்த பணியை செய்து தருவதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து பிரச்சாரத்தின்போது பேசிய அவர்,
இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக கூறினீர்கள், இங்கு மேல்நிலைத்தொட்டி கட்டித்தரப்பட நடவடிக்கை எடுக்கப்படும் தனது வன்னியர் சமுதாய மக்களை பார்த்தவுடன் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தவர், நம் சமுதாய மக்களுக்கு பல உதவிகளை செய்த ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் என்று தெரிவித்தார். இட ஒதுக்கீட்டை வழங்கியவர் கலைஞர். பிற்படுத்தப்பட்ட நம்மை படிக்க வேண்டும் என நினைத்து இட ஒதுக்கீட்டை வழங்கியவர் கலைஞர். பொங்கலூர் பழனிச்சாமிக்கு வாக்களிப்பது, உதயசூரியனுக்கு வாக்களிப்பது, இதன் மூலம் உலகத்தில் உள்ள தலைவர்களில் தூய தலைவனான தளபதி மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைப்பதுதான். உலகத்தில் உள்ள தலைவர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர் என்றார்.
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் இருண்ட ஆட்சி்நடைபெறுகின்றது. எங்கு போனாலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகிறது. இப்போதும் குடிநீர் பிரச்சினை உள்ளது. ஒரு தூய தலைவனை முதல்வராக்க அமர வைக்கும் நாள்தான் மே 19, வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து, மலைப்பாளையம் பகுதியில் பேசிய அவர்,
உதய சூரியன் தான் கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தையே மாற்றியிருக்கின்றது. கழக ஆட்சி எப்போதெல்லாம் மலர்கின்றதோ, எப்போதெல்லாம் கழக தலைவர் ஆட்சி பொறுப்பேற்கின்றாரோ, அப்போதெல்லாம் தமிழன் செழித்து இருக்கின்றான். தண்ணீர் பிரச்சினை எப்போதும் இருந்ததில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இருண்ட சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி் தேர்தல் நடத்தப்படவில்லை. குடிப்பதற்கு கூட குடிநீர் கொடுக்க முடியாத ஆட்சி நடைபெறுகின்றது. உண்ண உணவு, இருக்க இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை.
குடிப்பதற்கு கூட நீர் தர முடியாத அவலநிலை ஏற்பட்டிருக்கின்றது என்று சொன்னால். ஆட்சியை மாற்றுவதற்காக அனைவரும் ஒட்டுமொத்தமாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி. கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தென்னை நலவாரியம் அமைத்தார். தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நல வாரியம் அமைத்தார். இப்போது எடப்பாடி ஆட்சியில் நலவாரியம் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.
இதை செய்வதற்கு ஆள் இல்லாமல் போய் விட்டது. பஞ்சாயத்து தலைவர்கள் இல்லை ரேஷன் கடையில் கூட அரிசி கிடைப்பதில்லை. அதே திமுக ஆட்சியில் எ.வ.வேலு உணவு துறை அமைச்சராக இருந்தார்கள், இதுவரை இல்லாத அளவு பொருட்கள் முறையானபடி வழங்கப்பட்டது. ரேஷன் கடைகள் நவீனமயமாக்கப்பட்டது. அந்த பணியை பார்த்து தலைவர் கலைஞர் அவர்களே பாராட்டினார்கள் என்றார்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. தனது தொகுதியில் 25 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை கொடுத்ததாக தெரிவித்தவர், அந்த உதவி தொகைகளை கூட இவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
தற்போது தளபதி மாதம் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு, 5 சவரன் நகை அடகு வைத்திருந்தால் தள்ளுபடி, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ராகுல் கூறியுள்ளார். இதையெல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். நாடு நலம் பெற வேண்டும் எஎன்றால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றார்.
இந்த பிரச்சாரத்தின்போது, சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் த.மோ.அன்பரசு, ஒன்றிய்செயலாளர் மகாலிங்கம், பகுதி பொறுப்பாளர் மருதவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஊராட்சி செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.