July 24, 2018
தண்டோரா குழு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்ற தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்க நேற்று டெல்லி சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர். டெல்லி விமானநிலையத்தில் அவர்களை மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம்,
டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது. எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.லோக்சபா தேர்தலுக்கான சூழல் உருவாகவில்லை. அறிவிப்பு வந்தவுடன் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள் எனக் கூறினார்.
இந்நிலையில்,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தம்மை சந்திக்க மைத்ரேயனுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்மை சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.