September 24, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டம் துடியலூர் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இக்காட்டு யானைகளை விரட்டி அடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்கதையாகி வரும் காட்டு யானைகள் அச்சுறுத்தலால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.