March 30, 2019 தண்டோரா குழு
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரி துறையிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இருந்தனர். சுமார் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து துரைமுருகனின் மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியிளும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று நடைபெற்ற சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது கல்லூரி, பண்ணை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.