January 5, 2019 தண்டோரா குழு
திருவாரூர் தேர்தல் விவகாரத்தில் அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் அமமுக சார்பில் காமராஜும் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிடவுள்ளனர்.
இதற்கிடையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கிடையில்,திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் தேர்தல் விவகாரத்தில் அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.